வெள்ளி, 15 மார்ச், 2024

சிலப்பதிகாரம் புகார்க் காண்டம் கனாத்திறம் உரைத்த காதை

                                                சிலப்பதிகாரம்  புகார்க் காண்டம்

 கனாத்திறம் உரைத்த காதை


"
மகளிர் இரவிற்கு ஏற்ற கோலம் கொண்டு இல் உறை தெய்வத்தை வழிபடுதல"

அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர்
கோலங் கொடியிடையார் தாங்கொள்ள மேலோர்நாள்

 

 

அகல் நகர் எல்லாம் - அகன்ற மனையிடமெங்கும், அரும்பு அவிழ் - அரும்பு முறுக்கு நெகிழ்ந்த, முல்லை நிகர் மலர் - முல்லையின் ஒளி பொருந்திய மலரை, நெல்லொடு தூஉய் - நெல்லுடன் தூவி, பகல் மாய்ந்த மாலை - பகலவன் மறைந்த மாலைப் பொழுதிலே, மணி விளக்கம் காட்டி - அழகிய விளக்கையேற்றி, இரவிற்கு ஓர் கோலம் - இராப்பொழுதிற்கேற்றதோர் கோலத்தை, கொடி இடையார் தாம் கொள்ள - கொடி போலும் இடையையுடைய மகளிர் ]
       
நிகர் - ஒளி. மாய்தல் - மறைதல். தூவி இல்லுறை தெய்வத்தை வணங்கி யென விரித்துரைத்துக் கொள்க. 1 "நெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது, மல்ல லாவண மாலை யயர" என்றார் நக்கீரனாரும். மணி விளக்கம் என்பதனை உம்மைத் தொகையாகக் கொண்டு மாணிக்க விளக்கை மைவிளக்கோடே யெடுத்து என்றுரைப்பாருமுளர். இரவிற்கோர் கோலம் - கொழுநர் மார்பை அணைதற்கேற்ற நொய்தானவை உடுத்தும் புனைந்தும் ஒப்பனை செய்த கோலம். கொடியிடையார் மாலையின்கண் தூவிக் காட்டிக் கோலங் கொள்ள என்றியைக்க. தாம், அசை.

 

"மாலதியின் வரலாறு"

மாலதி இறந்த மகவைக் கொண்டு தெய்வக் கோட்டங்களுக்குச் சென்று,வரம் வேண்டுதல்"

5

மாலதி மாற்றாள் மகவுக்குப் பாலளிக்கப்
பால்விக்கிப் பாலகன் றான்சோர மாலதியும்

மேல் ஓர் நாள் - முன்னொரு நாளிலே, மாலதி - மாலதியென்னும் பெயருடைய ஓர் பார்ப்பனி, மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்க - தனது மாற்றாளின் குழவிக்குத் தன் முலை சுரந்த பாலைச் சங்கால் ஊட்ட, பால் விக்கிப் பாலகன் தான் சோர - அப் பால் விக்குதலாலே அக் குழவி மரிக்க ;

       
மேலோர் நாள் என்பது தொடங்கிக் கண்ணகியின் பார்ப்பனத் தோழியாகிய தேவந்தியின் வரலாறு கூறுகின்றார். மாற்றாள் - கணவனுடைய மற்றொரு மனைவி ; சக்களத்தி. மாற்றாள் இல்லாத பொழுது குழவி யழுதமையாற் பாலளித்தாளென்க. பால்-ஆன் பாலுமாம். பாலகன் என்பது காலவழக்கு. சோர்தல் - ஈண்டு மரித்தல். மேலை நாள் .

பார்ப்பா னொடுமனையா ளென்மேற் படாதனவிட்
டேற்பன கூறாரென் றேங்கி மகக்கொண்

 

மாலதியும்-, பார்ப்பானொடு மனையாள் - பார்ப்பானும் அவன் மனைவியும், என்மேல் படாதன விட்டு - என்மேல் அடாப்பழி கூறுத லொழிந்து, ஏற்பன கூறார் என்று ஏங்கி - ஏற்பன கூறாராதலால் இதற் கென்செய்கேனென்று ஏங்கி, மகக் கொண்டு - அம் மகவை யெடுத்துக்கொண்டு ;

       
பார்ப்பான் - கணவன். ஒடு - எண்ணொடு. படாதன - இல்லாதன ; அடாதன. கூறுதலென ஒரு சொல் விரிக்க. படாதன இட்டு எனப் பிரித்து, அடாதவற்றைச் சுமத்தி யென்றுரைத்தலுமாம்.


10

டமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில்
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்குந

அமரர் தருக் கோட்டம் - தேவர் தருவாகிய கற்பகம் நிற்குங் கோயில், வெள்யானைக் கோட்டம் - ஐராவதம் நிற்குங் கோயில், புகர் வெள்ளை நாகர்தம் கோட்டம் - அழகினையுடைய பலதேவர் கோயில், பகல் வாயில் உச்சிக்கிழான் கோட்டம் - கீழ்த்திசையிற் றோற்றுகின்ற சூரியன் கோயில், ஊர்க் கோட்டம் - இறைவன் ஊராகிய கைலாயம் நிற்குங் கோயில், வேற்கோட்டம் - முருகவேள் கோயில், வச்சிரக்கோட்டம் - வச்சிரப் படை நிற்குங் கோயில், புறம்பணையான் வாழ் கோட்டம் - சாதவாகனன் மேவிய கோயில், நிக்கந்தன் கோட்டம் - அருகன் கோயில், நிலாக்கோட்டம் - சந்திரன் கோயில், புக்கு எங்கும் - இக் கூறிய கோயில்கள் எங்கும் புக்கு ;

       
புகர் - அழகு. நாகர் - தேவர். பகல் வாயில் - பகற்றோற்றுகிறவாயில்; கீழ்த்திசை. உச்சிக்கிழான் - பகற்பொழுதிற் குரியோன். இனி, பகற்பொழுதிற்கு வழியான சூரியன் என்றுமாம். வேல் - ஆகுபெயர் ; வேற்படை நிற்குங் கோயில் என்றுமாம். புறம்பு அணைந்த விடம் புறம்பணையாயிற்று என்பர். சாதவாகனன் - ஐயனார். கோட்டம் யாவும் செவ்வெண்.

"சாத்தன் கோயிலில் மாலதி பாடுகிடக்க, இடாகினிப்பேய் அவள் கையிலிருந்த பிணத்தைப் பிடுங்கித் தின்னுதல்"


15

தேவிர்காள் எம்முறுநோய் தீர்மென்று மேவியோர்
பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்

தேவிர்காள் - தெய்வங்களே, எம் உறுநோய் - எம்மையுற்ற இத்துன்பத்தை, தீர்ம் என்று - தீர்ப்பீராகவென்று கூறிக் கொண்டு சென்று, மேவி ஓர் பாசண்டச் சாத்தற்கு - ஓர் பாசண்டச் சாத்தன் கோயிலை அடைந்து அவன்பால். பாடுகிடந்தாளுக்கு - வரங்கிடந்தாளுக்கு ;

       
தேவு - தெய்வம் ; இர் - முன்னிலைப் பன்மைவிகுதி. உறு - மிக்க என்றுமாம். தீர்ம் - தீரும் என்பதன் ஈற்று மிசை யுகரம் கெட்டது. தீர்மினென்று இரப்பவும் ஒருவரும் தீராமையின் அவ்விடங்களி னீங்கிச் சாத்தன் கோயில் மேவியென்று விரித்துரைத்தலுமாம். பாசண்டம் - தொண்ணூற்றறுவகைச் சமய சாத்திரத்தருக்கக் கோவை என்பர். "பாசண்டத் துறையு மிவற்றுட் பலவாம், பேசிற் றொண்ணூற் றறுவகைப் படுமே" என்பது திவாகரம். இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றவனாகலின் மகா சாத்திரன் என்பது இவற்குப் பெயராயிற்று என்பர். கிடந்தாளுக்கு - கிடந்தாளை ; உருபு மயக்கம்.





20

கேசும் படியோ ரிளங்கொடியாய் ஆசிலாய்
செய்தவ மில்லோர்க்குத் தேவர் வரங்கொடார்
பொய்யுரையே யன்று பொருளுரையே கையிற்
படுபிணந்தா வென்று பறித்தவள்கைக் கொண்டு
சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளிற் சென்றாங்
கிடுபிணந் தின்னு மிடாகினிப்பேய் வாங்கி
மடியகத் திட்டாள் மகவை இடியுண்ட

 

ஏசும்படி ஓர் இளங் கொடியாய் - பிறரைப் பழிக்கும் வடிவையுடையதொரு பெண் வடிவாய்த் தோன்றிப் பாடு கிடந்தாளை நோக்கி, ஆசு இலாய் - குற்றமற்றவளே, செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார் - செய்யப்பட்ட தவமுடைய ரல்லார்க்குத் தேவர் வரங்கொடார், பொய் உரை அன்று பொருள் உரையே - இது பொய்யுரை அன்று மெய்யுரையே எனச் சொல்லி, கையிற் படுபிணம் தா என்று - கையிலுள்ள குழவி இறந்த பிணத்தைப் பார்ப்பதற்குத் தாராயென்று, பறித்து அவள் கைக்கொண்டு - அவள் கையினின்றும் பறித்து, சுடுகாட்டுக் கோட்டத்து - சக்கரவாளக் கோட்டத்தில், தூங்கு இருளிற் சென்று - செறிந்த இருளிற் போய், ஆங்கு இடுபிணம் தின்னும் - அங்கே குழியிலிடும் பிணங்களைத் தின்னும், இடா கினிப் பேய் - இடாகினிப் பேயானவள், வாங்கி மடியகத்து இட்டாள் மகவை - அக் குழவியை வாங்கி வயிற்றிலே இட்டாள் ;

       
படி - வடிவு. இளங்கொடி - பெண். ஏசும்படி - இகழும்படி என்றுமாம். பொருள் - மெய்ம்மை. சுடுகாட்டுக் கோட்டம் - சக்கர வாளக் கோட்டம் ; இதன் வரலாறு மணிமேகலையிற் சக்கரவாளக் கோட்ட முரைத்த காதையாலறியப்படும். தூங்கு இருள் - யாவரும் துயிலுமிருளுமாம். மடி வயிறு என்னும் பொருட்டாதலை, 1 "படியை மடியகத்திட்டான்" என்பதனானும் அறிக. மடியகத்திட்டாள் - விழுங்கினாள் என்றபடி. கோட்டத்து இருளிற் சென்று தின்னும் பேய் இளங்கொடியாய்த் தோன்றி, வரங்கொடார் பொருளுரையே எனச் சொல்லி, தாவென்று பறித்து வாங்கி அம் மகவை மடியகத்திட்டாள் என்க. பேய் இளங்கொடியாய் இருளிற் சென்று என்றுரைத்தலுமாம். பறித்தாள் கைக்கொண்டு என்பதும் பாடம்.

 

 

 

"சாத்தன் மகவாய் வருதல்"



25

மஞ்ஞைபோ லேங்கி யழுதாளுக் கச்சாத்தன்
அஞ்ஞைநீ யேங்கி யழலென்று முன்னை
உயிர்க்குழவி காணாயென் றக்குழவி யாயோர்
குயிற்பொதும்பர் நீழற் குறுக அயிர்ப்பின்றி
மாயக் குழவி யெடுத்து மடித்திரைத்துத்
தாய்கைக் கொடுத்தாளத் தையலாள் தூய

இடியுண்ட மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு - அப்பொழுது இடிக்குரல் கேட்ட மயில் அகவுமாறுபோல ஏங்கி யழுகின்றவளை நோக்கி, அச் சாத்தன் - அந்தச் சாத்தன் என்னுந் தெய்வம், அஞ்ஞை - அன்னாய், நீ ஏங்கி அழல் என்று - நீ ஏங்கி அழாதொழி யென்று கூறி, முன்னை உயிர்க் குழவி காணாய் என்று அக் குழவியாய் ஓர் குயிற் பொதும்பர் நீழல் குறுக - நீ செல்லும்வழி முன்னர்க் குயில்களையுடைய ஓர் மரச்செறிவின் நீழலில் உயிருடன் கிடக்கும் குழவியைக் காண்பாயென்று தான் அக் குழவியாய் அவ்விடத்துச் சென்று கிடப்ப, அயிர்ப்பு இன்றி மாயக் குழவி எடுத்து மடித் திரைத்து - ஐயமின்றி அவ் வஞ்சக் குழவியைத் தன் குழவியென்றெடுத்து வயிற்றிலணைத்துக் கொடு போய், தாய் கைக்கொடுத்தாள் அத் தையலாள் - அவள் தாயின் கையிற் கொடுத்தாள் ;

       
அஞ்ஞை - அன்னை ; அண்மைவிளி. அழல் - அழாதே. முன்னை - வழி முன்னர் ; பழைய குழவியென்றுமாம். அச் சாத்தன் அக் குழவியாய்க் குறுக அத் தையலாள் எடுத்துக் கொடுத்தாள் என்க.

"தேவந்தியின் வரலாறு சாத்தன் கலை பல பயின்று தேவந்தியுடன் எட்டு யாண்டு இல்லறம் புரிந்து நீங்குதல்"


30

மறையோன்பின் மாணியாய் வான்பொருட் கேள்வித்
துறைபோ யவர்முடிந்த பின்னர் இறையோனும்
தாயத்தா ரோடும் வழக்குரைத்துத் தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள்

தூய மறையோன் பின் மாணியாய் - இருமரபுந் தூய மறையோனுக்குப்பின் செல்லும் பிரமசாரியாய், வான் பொருட் கேள்வித் துறை போய் - சிறந்த கல்வியிலும் கேள்வியிலும் துறை போகி, அவர் முடிந்த பின்னர் - தந்தை தாயர் இறந்த பின்பு, இறையோனும் - குழவியாய் வந்த சாத்தனும், தாயத்தாரோடும் வழக்குரைத்து - தன் ஞாதிகளோடும் வெல்வழக் குரைத்து, தந்தைக்கும் தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து - தந்தை தாயர்க்குச் செய்ய வேண்டிய நீர்க்கடன் முதலியவற்றைச் செய்து முடித்து, மேய நாள் - தன் மனைவியோடே கூடி வாழ்ந்தபின் ஒருநாளில் ;

       
வான்பொருள் - கல்வி. அவர் - தந்தையும் தாயரும். தாயர் என்றார் மாலதியையுங் கூட்டி. வழக்குரைத்து எனவே, தன் மனைவிக்குப் பொருட்குறைபாடில்லாமற் செய்து என்பதாயிற்று. இறையோனும் மாணியாய்த் துறைபோய் அவர் முடிந்த பின்னர்க் கடன் கழித்து வழக்குரைத்து மேவிய பின் ஓர் நாள் என்க. மேவினாள் என்று பாடங் கொண்டு தன்னை மேவினவள் என்றுரைப்பர் அரும் பதவுரை யாசிரியர்.



35

தேவந்தி யென்பாள் மனைவி அவளுக்குப்
பூவந்த வுண்கண் பொறுக்கென்று மேவித்தன்
மூவா இளநலங் காட்டியெங் கோட்டத்து
நீவா வெனவுரைத்து நீங்குதலுந் தூமொழி

 

தேவந்தி என்பாள் மனைவி அவளுக்கு - தன் மனைவியாகிய தேவந்தி யென்று பெயர் கூறப்படும் அவளுக்கு, பூ வந்த உண்கண் பொறுக்கென்று - பூவின்றன்மையுடைய மையுண்ட கண் இதனைப் பொறுப்பதாக என்று நிருமித்து, மேவி - பின்பு அவளைப் பொருந்தி, தன் மூவா இள நலம் காட்டி - தனது என்றும் மூத்தலில்லாத இளைய அழகினை வெளிப்படுத்தி, எம் கோட்டத்து நீ வா என உரைத்து நீங்குதலும் - நீ எமது கோட்டத்திற்கு வாவெனச் சொல்லி நீங்கினானாக ;

       
மக்கள் கண் தெய்வ யாக்கையைக் காணப்பொறாதாகலின் இவள் கண் பொறுக்க வென்று விதித்தனன். தன் மூவா இளநலம் - தனது தெய்வ யாக்கையின் நலம் ; 1 "மணங்கமழ் தெய்வத் திள நலங் காட்டி" என்றார் திருமுருகாற்றுப்படையினும். சாத்தன் தேவந்தியுடன் எட்டியாண்டு வாழ்ந்து, பின்பு இங்ஙனம் நீங்கினன் என மேல் 2 வரந்தரு காதையுட் கூறப்பட்டுளது.

 

 

"தேவந்தி சாத்தன் கோட்டத்தை வழிபட்டிருத்தல்"




40

ஆர்த்த கணவன் அகன்றனன் போயெங்கும்
தீர்த்தத் துறைபடிவே னென்றவனைப் பேர்த்திங்ஙன்
மீட்டுத் தருவா யெனவொன்றன் மேலிட்டுக்
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டருஞ்சீர்க்

தூமொழி - தூய மொழியினை யுடையளாய தேவந்தி, ஆர்த்த கணவன் - எனது நெஞ்சினைப் பிணித்த கணவன், அகன்றனன் போய் எங்கும் தீர்த்தத் துறை படிவேன் என்று - தீர்த்தத் துறைகளெங்கும் போய்த் தீர்த்த மாடுவேன் என்று என்னை விட்டு நீங்கினன் ; அவனைப் பேர்த்து இங்ஙன் மீட்டுத் தருவாய் என - அவனை மறித்தும் இவ்விடத்தே அழைத்துத் தருவாயென, ஒன்றன்மேல் இட்டு - ஒரு பெயரிட்டுக் கொண்டு, கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் - அவன் கோயிலை நாடோறும் வழிபடுதலைக் கடனாகக் கொண்டிருப்பவள் ;

"தேவந்தி கண்ணகியிடம் சென்று ஆசி கூறுதல்"


கண்ணகி நல்லாளுக் குற்ற குறையுண்டென்
றெண்ணிய நெஞ்சத் தினையளாய் நண்ணி
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று
பெறுக கணவனோ டென்றாள் பெறுகேன

வாட்டருஞ் சீர் - குறைதலில்லாத புகழையுடைய, கண்ணகி நல்லாளுக்கு - கண்ணகியாகிய நங்கைக்கு, உற்ற குறையுண்டு என்று - கணவன் பிரிதலால் உற்றதோர் துன்பமுண்டென்று, எண்ணிய நெஞ்சத்து இனையளாய் - நினைந்த நெஞ்சின் வருத்தத்தை யுடையளாய், நண்ணி - கோயிலை யடைந்து, அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய் - அறுகு முதலியவற்றை இவள் கணவனைப் பெறல் வேண்டுமெனத் தூவி வழிபட்டு, சென்று - கண்ணகிபாற் போய், பெறுக கணவனோடு என்றாள்- கணவனைப் பெறுவாயாகவென வாழ்த்தினாள் ;

       
வாடு வாட்டென விகாரமாயிற்று. வாடுதல் - குறைதல். பிறராற் கெடுத்தற்கரிய என்றுமாம். இனைதல் - வருந்துதல் ; இனைதல் இனையென்றாயிற்று ; விகாரம். கணவனோடு - வேற்றுமை மயக்கம். கண்ணகிபாற் சென்று நண்ணித் தூவிப் பெறுக வென்றாள் எனினு மமையும்.

 

"கண்ணகி தான் கண்ட கனாவினைத் தேவந்திக்கு உரைத்தல்"

45




50

கடுக்குமென் நெஞ்சங் கனவினால் என்கை
பிடித்தனன் போயோர் பெரும்பதியுட் பட்டேம்
பட்ட பதியிற் படாத தொருவார்த்தை
இட்டன ரூரா ரிடுதேளிட் டென்றன்மேற்
கோவலற் குற்றதோர் தீங்கென் றதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோ
டூர்க்குற்ற தீங்குமொன் றுண்டா லுரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனொ டுற்ற உறுவனோ டியானுற்ற
நற்றிறங் கேட்கின் நகையாகும் பொற்றொடீஇ

பெறுகேன் - நீ இங்ஙனம் கூறுதலாற் பெறுவேனாயினும், கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் - யான் உற்றதோர் கனவினால் என் னெஞ்சம் ஐயுறுகின்றது ; அக் கனவு என்னையெனின், என் கை பிடித்தனன் போய் - என் கொழுநன் என்னைக் கையைப் பற்றி அழைத்துப் போக, ஓர் பெரும் பதியுட் பட்டேம் - யாங்கள் ஓர் பெரிய பதியின்கட் புக்கேம்; பட்ட பதியில் - அங்ஙனம் புக்க பதியிலே, படாதது ஒரு வார்த்தை இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்றன்மேல் - எங்கட்கு ஏலாததோர் பழிச் சொல்லை அவ் வூரார் இடுதேளிடுமாறுபோல என்மேற் போட்டனர் ; கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு - அப் பழிமொழியால் கோவலற்கு ஓர் துன்ப முண்டாயிற்றென்று பிறர் சொல்ல அதனைக் கேட்டு, காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன் - அவ் வூரரசன் முன்னர் யான் சென்று வழக்குரைத்தேன் ; காவலனோடு ஊர்க்கு உற்ற தீங்கு ஒன்றும் உண்டால் - அதனால் அவ் வரசனோடு அவ் வூர்க்கும் உற்றதோர் தீங்குண்டு ; உரையாடேன் - அது தீக்கனாவாதலால் நினக்கு அதனை உரையேன் ; தீக்குற்றம் போலும் செறி தொடீஇ - செறிந்த தொடியினை யுடையாய், அப்பொழுது கடியதொரு குற்றம் உளதாயிற்று ; தீக்குற்றம் உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற - அத் தீய குற்றத்தை யுற்ற என்னோடு பொருந்திய மேலோனுடன் யான் பெற்ற, நற்றிறம் கேட்கின் நகையாகும் - நற்பேற்றினை நீ கேட்பாயாயின் அது நினக்கு நகையைத் தரும் ; (என - என்று சொல்ல),

       
கடுக்கும் - ஐயுறும் ; கடியென்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்தது. கனவில் என் கைப் பிடித்தனன் போக எனலுமாம். இடு தேளிடுதல் - தேளல்லாத தொன்றை மறைய மேலே போகட்டு அஞ்சப் பண்ணுதல். என்றன், தன் - அசை. கோவலன் சிலம்பு கவர்ந்தான் என்ற பழிச் சொல்லைத் தானே சுமப்பதாகக் கொண்டு என்றன் மேல் இட்டனர் என்றாள். என்று - என்று சொல்ல; சொல்ல என ஒரு சொல் வருவிக்க. அரசன் முன் செல்லாதேன் சென்று வழக்குரையாதேன் வழக்குரைத்தேன் என்றாளென்க. காவலனோடு, ஒடு - எண்ணொடு ; வேறு வினை ஒடுவுமாம். தீங்கு - அரசன் இறத்தலும் ஊர் எரியுண்ணலும். 1 "உரையார், இழிதக்க காணிற் கனா" என்பராகலின், உரையாடேன் என்றாள். தீக்குற்றம் - முலை திருகி யெறிதல். உறுவன் - மிக்கோன்; கோவலன். நற்றிறம் - இருவரும் துறக்கம் புகுதல். இது கிட்டாததென்று நகையாகும் என்றாள். என வென ஒரு சொல் வருவித்து நகையாகுமென

 

"தேவந்தி கூறிய தேறுதல் உரை" & "கண்ணகியின் மறுமொழி"

55




60

கைத்தாயு மல்லை கணவற் கொருநோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பிற் போய்க்கெடுக வுய்த்துக்
கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில்
மடலவிழ் நெய்தலங் கானற் றடமுள
சோமகுண்டஞ் சூரிய குண்டந் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு
தாமின் புறுவ ருலகத்துத் தையலார்
போகஞ்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாமொருநாள்
ஆடுது மென்ற அணியிழைக்கவ் வாயிழையாள்
பீடன் றெனவிருந்த பின்னரே நீடிய

பொற்றொடீஇ - பொன்னாலாய தொடியினையுடையாய், கைத்தாயும் அல்லை - நீ அவனால் வெறுக்கப்பட்டாயுமல்லை ; கணவற்கு ஒரு நோன்பு பொய்த்தாய் பழம் பிறப்பில்- முற்பிறப்பிலே நின்கணவன் பொருட்டுக் காக்கவேண்டியதொரு நோன்பு தப்பினாய், போய்க் கெடுக - அதனால் உண்டாய தீங்கு கெடுவதாக ; உய்த்துக் கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில் - காவிரி தன் நீரைக் கொண்டு சென்று கடலோடு எதிர்த்து அலைக்கும் சங்கமுகத்தயலதாகிய, மடல் அவிழ் நெய்தல் அம் கானல் - பூவின் இதழ் விரியும் நெய்தனிலத்துக் கானலிடத்தே, தடம் உள சோமகுண்டம் சூரிய குண்டம் - சோம குண்டம் சூரிய குண்டம் என்னும் பெயரையுடைய இரண்டு பொய்கைகள் உள்ளன ; துறை மூழ்கி - அவற்றின் துறைகளில் மூழ்கி, காம வேள் கோட்டம் தொழுதார் - மன்மதன் கோயிலையடைந்து அவனை வணங்கினாராயின், கணவரொடு தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார் - மகளிர் இவ் வுலகத்திலே தம் கணவரோடும் பிரியாதிருந்து இன்பமுறுவர் ; போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர் - மறுமையிலும் போக பூமியிற் போய்ப் பிறந்து கணவரோடும் பிரிவின்றி இன்பம் நுகர்வர் ; யாம் ஒரு நாள் ஆடுதும் என்ற அணியிழைக்கு - அவற்றில் யாமும் ஒரு நாள் ஆடக் கடவேம் என்று கூறிய தேவந்திக்கு, அவ் ஆயிழையாள் பீடு அன்று என இருந்த பின்னரே - கண்ணகி அங்ஙனம் துறை மூழ்கித் தெய்வந் தொழுதல் எங்கட்கு இயல்பன்று என்று சொல்லி இருந்தவளவிலே ;

       
பொய்த்தாயாகலின் தீங்குமிக்கது, அதுவுங் கெடுக என்றும், போய்ப் பிறந்து கணவரொடும் இன்புறுவர் ஆதலால் என்றும் விரித் துரைக்க. இவ் வுலகத்து இன்புறலையும் போக பூமியிற் போய்ப் பிறத் தலையும் குண்டமிரண்டிற்கும் நிரனிறை யாக்கலுமாம். பட்டினப் பாலையிலும் இவை 1 "இருகாமத் திணையேரி" எனக் கூறப்பட்டன. கற்புடை மகளிர் கணவனையன்றிப் பிற தெய்வத்தை வணங்குதல் இயல்பன்றென்பது,

       2 "
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை."

       3 "
சாமெனிற் சாத னோத றன்னவன் றணந்த காலைப் பூமனும் புனைத லின்றிப் பொற்புடன் புலம்ப வைகிக் காமனை யென்றுஞ் சொல்லார் கணவற்கை தொழுது வாழ்வார் தேமலர்த் திருவொ டொப்பார் சேர்ந்தவன் செல்ல றீர்ப்பார்." என்பவற்றானறியப்படும்.

 

"கோவலன் வருகையும், அவன் நிகழ்ந்ததற்கு இரங்கிக் கூறுதலும்"

65

காவலன் போலுங் கடைத்தலையான் வந்துநம்
கோவல னென்றாளோர் குற்றிளையாள் கோவலனும்

 



நீடிய காவலன் போலும் - பெருமையுடைய நம் அரசன் போலும், சடைத்தலையான் வந்து - வந்து நம் வாயிலிடத்தானாயினான்; நம் கோவலன் என்றாள் ஓர் குற்றிளையாள் - அவன் நம் கோவலனே என்றாள் ஓர் குறுந்தொழில் செய்யும் இளையவள் ;

       
தூரத்தே பார்த்துக் காவலன் போலுமென ஐயுற்று அவன் அணுகினவிடத்து ஐயம் தீர்ந்து கோவலன் என்றாள். காவலன் போலும் கோவலன் வந்து நீடிய கடைத்தலையான் என்றுரைத்தலுமாம். குற்றிளையாள்

பாடமை சேக்கையுட் புக்குத்தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தங்கண் டியாவுஞ்
சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த
இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன

கோவலனும் - அங்ஙனம் வாயிலிடத்தானான கோவலனும், பாடு அமை சேக்கையுட் புக்கு - பெருமையமைந்த படுக்கையிடத்தே புக்கு, தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தம் கண்டு - தன் காதலியின் வாட்ட முற்ற மேனியும் வருத்தமும் கண்டு, யாவும் - எல்லாம், சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி - வஞ்சம் பொருந்திய கொள்கையையுடைய பொய்த்தியோடுங் கூடியொழுகினமையால், குலம் தருவான் பொருட்குன்றம் தொலைந்த - நம் குலத்திலுள்ளார் தேடித் தந்த மலைபோலும் பெரிய பொருட்குவையெல்லாம் கெட்டதனாலாய, இலம்பாடு - வறுமை, நாணுத் தரும் எனக்கு என்ன - எனக்கு நாணைத் தருகின்றது என்று கூற ;

       "
மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர், கோலங் கொடியிடையார் தாங்கொள்ள" அக் காலத்தே வந்து சேக்கையுட் புக்கு என்றியைத் துரைக்க. சலம் - வஞ்சம், பொய். இலம்பாடு - இல்லாமையுண்டாதல் ; வறுமை. கெட்டால் மதிதோன்றும் என்றதற்கேற்ப இன்று நாணுத் தருமென்றான்.

"கண்ணகியின் விடை"


நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிச்
சிலம்புள கொண்மெனச் சேயிழை கேளிச்

நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி - (அவன் இங்ஙனம் கூறியதனை மாதவிக்குக் கொடுக்கும் பொருட் குறை பாட்டால் தளர்ந்து கூறினானாகக் கருதி) ஒளி பொருந்திய முகத்தே நன்மை பொருந்திய சிறிய முறுவலைத் தோற்றுவித்து, சிலம்பு உள கொண்மென - இன்னும் சிலம்பு ஓரிணை உள்ளன ; அவற்றைக் கொண்மினென்றுரைக்க ;

       
சிலம்புள என்றாள் ; இவை யொழிந்த கலனெல்லாம் தொலைதலால். கொண்ம் - கொள்ளும் என்பதன் ஈற்று மிசை யுகரம் மெய்யொடுங் கெட ளகரம் திரிந்தது.

"கோவலன் மதுரை சென்று பொருள் ஈட்ட எண்ணியுள்ள தனது கருத்தை வெளியிட்டு, விடியுமுன் கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் செல்லுதல்"


75

சிலம்பு முதலாகச் சென்ற கலனோ
டுலந்தபொரு ளீட்டுத லுற்றேன் மலர்ந்தசீர்
மாட மதுரை யகத்துச்சென் றென்னோடிங்
கேடலர் கோதா யெழுகென்று நீடி
வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குற்
கனைசுடர் கால்சீயா முன்.

சேயிழை கேள் - சேயிழையே இதனைக் கேள், இச்சிலம்பு முதலாக - நீ கூறிய இச் சிலம்பை நான் வாணிக முதலாகக் கொண்டு, சென்ற கலனோடு உலந்த பொருள் ஈட்டுதலுற்றேன் - முன்பு நான் வாங்கியழித்தமையால் ஒழிந்த கலன்களையும் கெட்ட பொருளையும் தேடத் துணிந்தேன், மலர்ந்த சீர் மாட மதுரையகத்துச் சென்று - பரந்த புகழையுடைய மாடங்களையுடைய மதுரை யென்னும் பதியிடத்தே சென்று ; என்னோடு இங்கு ஏடு அலர் கோதாய் எழுகென்று - இதழ்கள் விரிந்த கோதையையுடையாய் அதற்கு நீ இப்பொழுதே இங்கு நின்றும் என்னோடு புறப்படுவாயாக என்று கூறி, நீடி வினை கடைக் கூட்ட - முற்பிறப்பிற் றான்செய்த தீவினை நெடுங்காலம் நின்று நெஞ்சை ஒருப்படுத்த, வியம் கொண்டான் -அவ்வினையினது ஏவலைக் கொண்டான் ; கங்குல் - இருளை, கனை சுடர் - ஞாயிற்றின் மிக்க ஒளி, கால் சீயாமுன் - அவ்விடத்தினின்றும் போக்குதற்கு முன் என்க.

       
நீடி - நெடுங்காலம் நின்று. வியம் - ஏவல். கால் - இடம். சீத்தல் - போக்குதல். மதுரையகத்துச் சென்று ஈட்டுதலுற்றே

 

"வெண்பா"

காதலி கண்ட கனவு கரு நெடுங் கண்
மாதவி-தன் சொல்லை வறிதாக்க, மூதை-
வினை கடைக்கூட்ட வியம் கொண்டான்-கங்குல்
கனை சுடர் கால் சீயாமுன்.

வெண்பா

காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க--மூதை
வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குற்
கனைசுடர் கால்சீயா முன்.

(காதலி கண்ட ...... சீயாமுன்.) காதலி கண்ட கனவு - கண்ணகி கண்ட கனவு, கரு நெடுங்கண் மாதவிதன் சொல்லை வறி தாக்க - கரிய நெடிய கண்களையுடைய மாதவியின் சொல்லைப் பயனின்றாக்க, மூதை வினை கடைக் கூட்ட - பழவினை நெஞ்சை ஒருப்படுத்த, வியம் கொண்டான் கங்குற் கனை சுடர் கால் சீயாமுன் - கங்குலைச் சுடர் போக்குதற்கு முன் அவ் வினையின் ஏவலைக் கொண்டான். இவட்கு மேற்கூட்ட மின்மையால் கருநெடுங்கண் என்றார். சொல்லை வறிதாக்குதல் - வேனிற் காதையில், காலை காண்குவம் என்ற சொல்லைப் பயனின்றாக்குதல்.

                   
கனாத்திறமுரைத்த காதை முற்றிற்று.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக